அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை

மத்திய-மாநில அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும், என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-01-20 21:21 GMT
சென்னை,

முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பல்வேறு ஆணையகங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பலர் மத்திய-மாநில அரசு சின்னங்களை தவறாக தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர்கள், கடிதங்கள், கொடிகள் மற்றும் பெயர்பலகைகளில் பயன்படுத்துவதாக தெரிய வந்ததால், உரிய நடவடிக்கை எடுக்க, காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரசு சின்னங்களை அனுமதி இன்றி தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வழிவகைகள் உள்ளது. அரசு விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட நபர்கள், அதிகாரிகள் தவிர மற்றவர்கள் அரசு சின்னங்களை பயன்படுத்தக்கூடாது. மேலும் முன்னாள் அமைச்சர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகளும் தங்களது வாகனங்களில் முத்திரை மற்றும் லெட்டர்பேடு, விசிட்டிங் கார்டுகளில் அரசு சின்னங்களை பயன்படுத்தக்கூடாது.

பொதுமக்கள் புகார் கொடுக்கலாம்

இதுபற்றி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கலாம். தவறாக பயன்படுத்தப்படும் அரசு சின்னங்களை சாட்சிகள் முன்னிலையில் பறிமுதல் செய்யவும், அந்த நிகழ்வை காணொலி காட்சியாக பதிவு செய்யவும், காவல்துறைக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்