மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 48½ லட்சம் பேர் பயன்
தமிழகத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 48½ லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் கடந்த 7 மாதங்களாக நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உயர் ரத்த அழுத்த நோய் சிகிச்சை, நீரிழிவு நோய் சிகிச்சை, நோய் ஆதரவு சிகிச்சை, இயன்முறை சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சை முறைகளை நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது. மேலும் சிறு நீரக நோய்க்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகளும் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.
இதுவரை இத்திட்டத்தின் மூலம் முதன்முறையாக 48 லட்சத்து 50 ஆயிரத்து 213 பேரும், தொடர் சேவையாக 42 லட்சத்து 77 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.