கடும் பொருளாதார நெருக்கடி: மேலும் 19 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 19 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

Update: 2022-04-10 03:23 GMT
ராமேசுவரம்,

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றன.

பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவி வருவதால் கொழும்பு உள்பட பல்வேறு இடங்களில் பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் தினமும் போராடி வருகின்றனர்.

கடும் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் கள்ளப்படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்து தஞ்சமடைய வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு மேலும் 19 பேர் வந்திருப்பதாக தனுஷ்கோடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனுஷ்கோடி அருகே அரிசல்முனைக்கு வந்த 19 பேரிடம் கியூபிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே 20 பேர் வந்தநிலையில் மேலும் 19 பேர் இன்று தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குபின்னர் ஏராளமான அகதிகள் தனுஷ்கோடிக்கு வந்துகொண்டிருந்ப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்