தஞ்சாவூர்: டவுன் பஸ்சில் பயணிகளுக்கு குடிநீர் வசதி; டிரைவர்- கண்டக்டர்களுக்கு பாராட்டு....!

தஞ்சாவூர் அருகே டவுன் பஸ்சில் பயணிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்த டிரைவர், கண்டக்டர்களை பயணிகள் பாராட்டி உள்ளனர்.

Update: 2022-04-20 10:15 GMT
திருக்காட்டுப்பள்ளி, 

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வெளியே செல்லும் மக்கள் நீர்ச்சத்து மிக்க பழங்களையும் பானங்களையும் அருந்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்த நிலையில் கடுமையான வெயில் நேரத்தில் பஸ்களில் பயணம் செய்யும் பொது மக்கள் தாகத்தில் தவிக்காமல் இருக்க கண்டக்டர் மற்றும் டிரைவர்கள் தாங்களாகவே முன் வந்து குடிநீர் வசதி செய்து தரும் நிகழ்வு ஒன்று தஞ்சாவூரில் நிழக்ந்து உள்ளது. 

அந்த வகையில் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து பூதலூர், செங்கிப்பட்டி வழியாக சுரக்குடிபட்டிக்கு டவுன் பஸ் ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பஸ்சில் பணியாற்றும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் இணைந்து பயணிகளுக்கு குடிநீர் வழங்கி வருகின்றனர். 

இவர்கள் டிரைவர் இருக்கைக்கு பின்னால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் வாங்கி வைத்துள்ளனர். அதிலிருந்து பயணிகள் தண்ணீரை குடிப்பதற்கு வசதி செய்து உள்ளனர்

இந்த ஏற்பாட்டினை செய்த டிரைவர்கள் சரவணகுமார், செல்வராஜ், கண்டக்டர்கள் பிரேம்குமார், முத்தமிழ்ச் செல்வன் ஆகியோரின்  மனிதாபிமான நடவடிக்கைகளை இந்த பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் நன்றியோடு பாராட்டுகின்றனர்.

மேலும் செய்திகள்