நாமக்கல்: லாரி மீது கார் மோதி விபத்து - கணவன்-மனைவி உயிரிழப்பு...!

நாமக்கல் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி உயிரிழப்பு.

Update: 2022-05-01 03:57 GMT
பெருந்துறை, 

நாமக்கல் மாவட்டம் ஓமலூர் ரோடு கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் சிங் (வயது 38).  இவர் தனது மனைவி தாராபாய்(55), மகள்கள் கவிதா (25), காகிதா (12) ,யோசிகா  (2) ஆகியோருடன் அவரது காரில் குடும்பத்துடன் அவினாசியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் நாமக்கல்லில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

காரை சந்தோஷ் சிங் ஓட்டி வந்துள்ளார். இந்த கார் நேற்று மாலை பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிகோவில் ரோடு பைபாஸ் அருகே வரும்போது காருக்கு முன்னால் சென்ற லாரி வேகம் குறைவதை கவனிக்காமல் லாரியின் பின் பகுதியில் பலமாக மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் சிங் இறந்துவிட்டார். 

உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காரில் இருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

வழியிலேயே தாராபாய் பரிதாபமாக இறந்து போனார். பலத்த அடிபட்ட குழந்தைகள் மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகள்