பொதுத் தேர்வு எழுத மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் விபத்தில் படுகாயம்...!

செய்யாறு அருகே பொதுத் தேர்வு எழுத மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்து உள்ளனர்.

Update: 2022-05-06 10:27 GMT
செய்யாறு,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பாராசூர் பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவரின் மகன் சதீஷ் (வயது 15) மற்றும் அவரது நண்பர் அபிஷேக் (15). இவர்கள் இருவரும் கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.  

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் விஜய்(15) பாராசூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். 

தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த மாணவர்கள் 3 பேரும் தேர்வு எழுதும் மையமான கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். 

இவர்கள் தாண்டுகுளம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் சாலையோரம் நின்றிருந்த எழில்குமார் (40) என்பவர் மீது மோதியது.

இந்த விபத்தில் எழில் குமார் உட்பட 4 பேரும் காயமடைந்தனர். பின்னர் அப்பகுதியினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் லேசான காயம் அடைந்த அபிஷேக் மட்டும் தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத சென்று உள்ளார்.
 
படுகாயமடைந்த சதீஷ், விஜய் மற்றும் எழில் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து செய்யாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்