மார்த்தாண்டத்தில் தனியார் கல்வி நிறுவனத்தில் நகை-பணம் கொள்ளை..!

மார்த்தாண்டம் அருகே தனியார் கல்வி நிறுவனத்தில் இருந்து நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-05-10 06:00 GMT
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம்  திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தோமஸ்ராஜ் (வயது 52). இவர் தனியார் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.  நேற்று மாலை பணி முடிந்ததும் வழக்கம்போல் கல்வி நிறுவனத்தை பூட்டி சென்றுள்ளார்.

பின்னர் இன்று காலை ஒன்பது மணிக்கு  கல்வி நிறுவனத்தை திறந்து பார்த்தபோது பொருட்களெல்லாம் சிதறிய நிலையில் கிடந்துள்ளன. உடனே அவர்  மேல் மாடியில் உள்ள அலுவலக அறைக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த அலமாரி மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 1.96 லட்சம் மற்றும் 5 பவுன் தங்க நாணயம், 1.5 பவுன் தங்க மோதிம் ஆகியவற்றை  கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தோமஸ்ராஜ் போலீசிடம் புகார் அளித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து  ஆய்வு செய்தபோது, கல்வி நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக ஏறி கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது குறித்து கல்வி நிறுவன உரிமையாளர் தோமஸ்ராஜ் போலீசாரிடம் தெரிவித்ததாவது, இன்று மாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு குடும்பத்துடன் செல்ல முடிவு செய்துள்ளதாகவும், கோவிலில் நேர்த்தி கடன் செலுத்த தங்க நாணயம் வாங்கி வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

தனியார் கல்வி நிறுவனத்தி நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்