கேரளாவில் தக்காளி காய்ச்சல் சோதனைக்கு பிறகே வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதி

கேரளாவில் தக்காளி காய்ச்சல் அதிகரித்து வருவதால் வாளையார் சோதனைச்சாவடியில் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்.

Update: 2022-05-10 19:58 GMT
கோவை,

கேரளாவில் தக்காளி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கொப்பளம் போல் தோன்றக்கூடிய இந்த காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட 82 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தக்காளி காய்ச்சல் மற்றவர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது. எனவே அதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக -கேரள எல்லையான வாளையார் வழியாக ஏராளமான வாகனங்கள் கோவை வருகின்றன. இதனால் கோவையிலும் தக்காளி காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பரிசோதனை தீவிரம்

கேரளாவில் இருந்து கோவை வரக்கூடிய வாகனங்களை நிறுத்தி சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். அந்த வாகனங்களில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்கின்றனர்.

மேலும் கை மற்றும் தோலில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகள் இருக்கிறதா? என்று சோதனை செய்கின்றனர். மேலும் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் முககவசம் மற்றும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகள் இருக்கிறதா? என்பது குறித்தும் பயணிகளிடம் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். அதன் பிறகே அந்த வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்