"திரும்ப வந்துட்டேன்னு சொல்லு"- உடல் நலபாதிப்பு குறித்த தகவலுக்கு நித்யானந்தா பதில்...!

உடல் நலபாதிப்பு குறித்த தகவலுக்கு நித்யானந்தா விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-05-12 13:32 GMT
சென்னை,

நித்யானந்தா குறித்து பல்வேறு சர்ச்சைகள் அடிக்கடி எழுந்தாலும், அவர் உடல் நலம்பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள்  உலாவருகிறது. அவருக்கு 27 டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அவரது பக்தர்கள் கலக்கத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

இந்த நிலையில் நித்யானந்தா தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் “திரும்ப வந்துட்டேன்னு சொல்லு“ என கைப்பட எழுதிய வாசகம் மற்றும் அவரின் படங்களைப் பகிர்ந்து சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“பரமசிவனின் ஆசிகள்… என் ஹேட்டர்கள் நான் இறந்துவிட்டதாகப் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம். சமாதியில் இருக்கிறேன். ஆனால் இறக்கவில்லை. 

தனக்குப் பேசவோ சத்சங்கங்களை வழங்குவதற்கோ சக்தி வருவதற்கு இன்னும் நேரம் எடுக்கும். மக்கள், பெயர்கள், இடங்கள் பற்றிய இணைப்பு முழுமையாக எனக்குக் கிடைக்கவில்லை. கைலாசாவின் ஸ்பேஸ் மற்றும் வைபரேஷன்தான் மனதில் அதிகமாக உள்ளது.

என்னுடைய இளைய வயதிலிருந்து கௌரி விரதம், பச்ச பத்னி விரதம் என என் குலதேவதை மாரியம்மனுக்கு விரதம் இருந்து வருகிறேன். 44 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக இருந்து வருகிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை. நான் சமாதியில் மட்டுமே உள்ளேன். இன்னும் சிகிச்சையிலிருந்து வரவில்லை. தற்போது மருத்துவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்கள் என்பதைவிட, என்னுடைய பக்தர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்றும் கூறலாம்.

மருத்துவர்கள் என்னுடன் நேரத்தைச் செலவிட விரும்புகிறார்கள். எனது நித்ய சிவ பூஜை மட்டும் தினமும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நான் இன்னும் சாப்பிடவோ, தூங்கவோ இல்லை. நலம்பெற வாழ்த்திய பக்தர்கள் அனைவருக்கும் நன்றி. 28 நாட்கள் பத்னி விரதம் செய்தேன். நான் இறந்து விட்டதாக சில வெறுப்பாளர்கள் பொய்யும் புரட்டும் செய்ய முயல்கிறார்கள். அதுதான் என் உடல்நிலைக்குக் காரணம்” என விளக்கம் அளித்துள்ளார்.


மேலும் செய்திகள்