முதல்-அமைச்சர் நியாயமாக நடக்காததால் கவர்னரிடம் தீர்வு காண்போம் - அண்ணாமலை

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவத்தில், முதல்-அமைச்சர் நியாயமாக நடக்கவில்லை என்றும், இங்குள்ள மக்களை கவர்னரிடம் அழைத்து சென்று தீர்வு காண்போம் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2022-05-15 00:11 GMT
ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்காக...

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரில் உள்ள வீடுகளை அகற்றும் சம்பவத்தில், கண்ணையன் என்பவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய குடும்பத்தினரை பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் இருந்தனர். அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

1971-ம் ஆண்டில் அரசாங்கத்தின் குடிசை மாற்று வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இடமாக ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் உள்ளது. ஒரு தனிப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு பாதை வேண்டும் என்பதற்காக இந்த பகுதி மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்து இருக்கிறார்கள். இப்போது அவசரம், அவசரமாக இந்த இடத்தில் உள்ள வீடுகளை இடித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் சென்னைக்குள் அகதிகளாக மக்களை மாநில அரசு ஏற்படுத்தி கொடுத்துவிட்டு, நாங்கள் திராவிட மாடல் அரசு என்று சொல்கிறார்கள். இதை பார்த்து மக்கள் சிரிக்கதான் செய்வார்கள்.

கவர்னரிடம் தீர்வு காண்போம்

கண்ணையன் இறந்தபோது, என்னிடம் கொடுக்க சொல்லி ஒரு வீடியோ கொடுத்து இருக்கிறார். அதில் பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார். ஊமை மக்களாக எங்களை நினைத்து இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு செய்திருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இங்கு மனித உரிமை விதிமீறல்கள் நடந்துள்ளன. பா.ஜ.க. இங்குள்ள மக்களை கவர்னரிடம் அழைத்து சென்று தீர்வு காண்போம். ஏனென்றால், முதல்-அமைச்சர் இந்த விஷயத்தில் நியாயமாக நடக்கவில்லை. எனவே கவர்னர் மூலமாக தலைமை செயலாளரிடம் விளக்கம் கேட்டு, இனியும் வீடுகள் இடிக்கப்படாமல் இருப்பதற்கும், இடித்த வீடுகளை மீண்டும் கட்டித்தருவதற்கும் உதவி செய்வோம்.

அதிகார பலம்

நீர்நிலைகள் மீது கட்டப்பட்டு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஏனென்றால் அவர்கள் அனைவரும் பெரிய நிறுவனத்தை சார்ந்தவர்கள். பணம் வைத்திருப்பவர்கள். ஆனால் இங்குள்ளவர்கள் தினமும் வேலை செய்து சாப்பிடுபவர்கள், அவர்களை யாரும் போய் கேட்கமாட்டார்கள். பணபலம் இல்லை என்பதால் இங்கு அரசு கை வைத்திருக்கிறது. ஊமை மக்கள் மீது அதிகார பலத்தை காட்டி நாங்களும் வேலை செய்கிறோம் என்ற மாயையை அரசு ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. இந்த மக்கள் கூட நிற்கப்போகிறது. அரசு உள்நோக்கத்துக்காக தான் இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருநபர் ஐகோர்ட்டு நீதிபதியை நியமித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்