அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 2.58 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற ஜூலை மாதம் 3-ந்தேதி தொடங்குகின்றன.

Update: 2024-05-25 07:02 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த 6-ந்தேதி தொடங்கியது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்தார்கள்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க மே 24-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த 19 நாட்களில், 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். மாணவர்களின் தரவரிசை பட்டியல் கல்லூரிகளுக்கு வருகிற 27-ந்தேதி அனுப்பி வைக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகள் தொடங்குகின்றன. முதல்கட்டமாக, சிறப்பு ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன்பிறகு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு அடுத்த மாதம் (ஜூன்) 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு அடுத்த மாதம் 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற ஜூலை மாதம் 3-ந்தேதி தொடங்குகின்றன.

கடந்த 2023-24-ம் கல்வியாண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 விண்ணப்பங்கள் வந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்