என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களின் 3 மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிப்பு

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களின் 3 மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிப்பு

Update: 2023-05-26 19:00 GMT

செட்டிப்பாளையம்

கோவை அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களின் 3 மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ண சாகர் (வயது 22). கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் அபிஷ் (20), கதிரவன் (20). இவர்கள் 3 பேரும் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர். மாணவர்கள் 3 பேரும் மலுமிச்சம்பட்டி அண்ணா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிள்கள் மூலம் சென்று வந்தனர். கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு திரும்பும் இவர்கள் அங்குள்ள காம்பவுண்டுக்குள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவர்கள் வழக்கம் போல் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு சென்றனர்.

தீவைத்து எரிப்பு

நேற்று காலை 5 மணியளவில் வீட்டின் முன்பு இருந்து சத்தம் வந்தது. உடனடியாக மாணவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது 3 பேரின் மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. இதைப்பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்போில் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருந்த போதிலும் 3 மோட்டார் சைக்கிள்களும் முழுவதுமாக எரிந்து நாசமாகின. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

========================

Tags:    

மேலும் செய்திகள்