சொத்துவரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

வருகிற 30-ந்தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-20 20:55 GMT

வருகிற 30-ந்தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அறிவிப்பு

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998-க்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 13-ந்தேதி முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் 2023 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 பிரிவு 84 (1) ல், அரையாண்டுக்கான சொத்துவரியினை முதல் 30 நாட்களுக்குள் செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும். அதன்படி மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியினை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தும் உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெறலாம். எனவே வருகிற 30-ந் தேதிக்குள் சொத்துவரியினை செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும். அதன்படி மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் ஐந்து மண்டல அலுவலகங்களில் அறிவிப்பு பலகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பதாகைகள் வைத்தல், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தல், ரேடியோ, செய்தித்தாள்கள் மற்றும் உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி வாயிலாக சொத்துவரியினை உரிமையாளர்கள் செலுத்துவதற்கு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செயலி

எனவே சொத்து உரிமையாளர்கள், சொத்துவரியினை மதுரை மாநகராட்சி அனைத்து வரி வசூல் மையங்கள் மற்றும் https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் "TN Urban Esevai" செயலி வாயிலாக வரி செலுத்துவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகையினை பெற்று கொள்ளலாம். எனவே உரிய காலத்தில் வரி செலுத்தி மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்