மான் வேட்டையாடிய 5 பேர் கைது

ராஜபாளையம் அருகே மான் வேட்டையாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இறைச்சி, துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-17 18:48 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் அருகே மான் வேட்டையாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இறைச்சி, துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

மான் வேட்டை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரக அலுவலர் கார்த்திக் (பொறுப்பு), சேத்தூர் வனவர் கார்த்திக் ராஜா உள்ளிட்ட 5 பேர் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர்.

அப்போது ராஜபாளையத்தை சேர்ந்த இளங்கோ என்பவரது பண்ணையில் சோதனை மேற்கொண்டனர். அங்கு மான் இறைச்சி, அதன் எலும்புகள் இருந்ததும், மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

5 பேர் கைது

இதைதொடர்ந்து அங்கு சோதனை நடத்தினர். அப்போது வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட 2 நாட்டு துப்பாக்கிகள், 23 தோட்டாக்கள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட 6 ஆயுதங்கள், பேட்டரி விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பண்ணை உரிமையாளர் இளங்கோ (வயது63), சேத்தூரை சேர்ந்த பாலு (54), கிருஷ்ணன் (63), மலையரசன் (50), பாண்டியராஜன் (48) ஆகிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்