பள்ளி மாணவர்களுக்கு 50 ஆயிரம் மரக்கன்றுகள்

கள்ளக்குறிச்சி புத்தக கண்காட்சிக்கு வருகை தரும் பள்ளி மாணவர்களுக்கு 50 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய் மீனா தொடங்கி வைத்தார்

Update: 2022-12-23 18:45 GMT

கள்ளக்குறிச்சி

புத்தக கண்காட்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட நூலகத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி-சென்னை பைபாஸ் திடலில் புத்தக திருவிழா என்ற பெயரில் புத்தக கண்காட்சி கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது.

புத்தக கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்பு செயலாளருமான ஹர்சகாய் மீனா பார்வையிட்டார். முன்னதாக பதிப்பகங்கள் அமைத்துள்ள புத்தக அரங்குகளை பார்வையிட்டு தமிழ் பழமொழிகள் குறித்த புத்தகத்தை அவர் வாங்கினார்.

50 ஆயிரம் மரக்கன்றுகள்

தொடர்ந்து பள்ளி கல்வித் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள எண்ணும், எழுத்தும் அரங்கை பார்வையிட்டு செயல்முறை விளக்கத்தில் கற்றல், கற்பித்தல் குறித்து கேட்டறிந்த அவர் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்ததோடு அரசின் பல்துறை விளக்க கண்காட்சி அரங்கத்தையும் பார்வையிட்டார்.

மாணவர்கள் புத்தகங்கள் வாங்கி படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் புத்தக கண்காட்சிக்கு வருகை தரும் பள்ளி மாணவர்களுக்கு நாவல், நெல்லி, இலுப்பை, பப்பாளி, வேம்பு உள்ளிட்ட 50 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. புத்தக கண்காட்சிக்கு வருகை தந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு மரகன்றுகளை ஹர்சகாய் மீனா வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கோட்டாட்சியர் பவித்ரா, தாசில்தார் சத்தியநாராயணன், நகராட்சி ஆணையர் குமரன், எலவனாசூர்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பசுமைபடை ஒருங்கிணைப்பாளரும், உடற்கல்வி ஆசிரியருமான சாமிதுரை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்