இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2024-02-06 06:10 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 22-ம் தேதி 480 விசைப்படகுகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் 2 விசைப்படகுகளில் ஐசக், ஈஸ்டர் ஆரோக்கியதாஸ், சிசேரியன், சமாதான பாபு, நிசாந்தன், முருகேசன் ஆகிய 6 பேர் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

இந்த 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சிறைபிடித்து கைது செய்தனர். படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் மீனவர்களை இலங்கையின் மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 6 மீனவர்களும் இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 6 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மீனவர்களின் 2 படகுகளை அரசுடமையாக்கி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்