ரூ.61½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

ரூ.61½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-05-03 19:23 GMT

செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் ரூ.71 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுமார் ரூ.35 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 2 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களை தனியே அழைத்து சென்று சோதனை செய்து, விசாரணை நடத்தினர்.

இதில், அவர்களில் ஒருவரான மலேசியாவை சேர்ந்த ஹோவ் என் பிங்க்(வயது 35) என்பவர் தனது டிராவல் பேக்கில் மறைத்து ரூ.30 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான 508 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதேபோல் மற்றொருவரான மலேசியாவை சேர்ந்த மணிவண்ணன்(23) தனது டிராவல் பேக்கில் மறைத்து ரூ.30 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான 509 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், 2 பேரிடமும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் ரூ.61 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான ஒரு கிலோவுக்கும் மேற்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்