வியாபாரியிடம் பூண்டு வாங்கி ரூ.8½ லட்சம் மோசடி

வியாபாரியிடம் பூண்டு வாங்கி ரூ.8½ லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.;

Update:2023-08-08 00:30 IST

கோவை

தஞ்சாவூர் மாவட்டம் கீழரதவீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). இவர் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து மொத்தமாக பூண்டு வாங்கி தமிழகம் முழுவதும் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

என்னை கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் கோவை உக்கடம் அருகே கரும்புக்கடையை சேர்ந்த அன்வர் சதாத், மீரான் மைதீன், சையது தாவூத், சுந்தர், சேலத்தை சேர்ந்த பிரபு மணிகண்டன் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த மோனிகா என்ற கவுதமி ஆகியோர் தொடர்பு கொண்டு மிளகு, பூண்டு, மல்லி, கடுகு, சீரகம் உள்ளிட்ட மளிகை பொருட்களை வாங்கி வெளிநாட்டுக்கு மொத்தமாக அனுப்பி வியாபாரம் செய்து வருகிறோம் என்று கூறினர்.

மேலும் அவர்கள் என்னிடம் 10 டன் பூண்டுவை கோவைக்கு லாரியில் அனுப்பி வைத்தால் அதற்கான பணத்தை உடனே அனுப்பிவைப்பதாக கூறினர். இதைநம்பி நான் 10 டன் பூண்டுவை தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு அனுப்பிவைத்தேன். ஆனால் அவர்கள் ரூ.12 லட்சத்தை தராமல் இழுத்தடித்து வந்தனர்.

பின்னர் அவர்களை தொடர்ந்து தொடர்புகொண்டபோது ரூ.3½ லட்சத்தை கொடுத்தனர். அதன்பிறகு மீதி தொகையை கொடுக்காமல் மோசடி செய்துவிட்டனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்