மின்கம்பத்தில் கார் மோதி விபத்து
விளாங்குறிச்சி சாலையில் மின்கம்பத்தில் கார் மோதி விபத்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்;
சரவணம்பட்டி
கோவை சரவணம்பட்டியில் இருந்து விளாங்குறிச்சிக்கு செல்லும் சாலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு தனியார் நிறுவனத்தின் கார் ஐ.டி. நிறுவன ஊழியர்களை இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டு இருந்தது.
விளாங்குறிச்சி சாலையில் பஸ் நிறுத்தம் அருகே கார் வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் தாறுமாறாக ஓடிய கார், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் மின்கம்பம் 2 துண்டாக முறிந்து கார் மீது விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக கார் டிரைவர் உயிர் தப்பினார்.
மின்கம்பத்தில் கார் மோதியதால் மின்தடை ஏற்பட்டது. அதி காலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நிகழ வில்லை. இது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், கார் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.