பொது இடங்களில் குப்பைகள் குவிந்தால் புகார் அளிக்கலாம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பொது இடங்களில் குப்பைகள் குவிந்தால் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2022-10-12 11:04 GMT

சென்னை,

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 78 ஆயிரத்து 136 கடைகள் உள்ளன. இந்த கடைகளின் உரிமையாளர்கள் கட்டாயம் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் 2 குப்பை தொட்டிகள் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 26,242 கடைகளில் 2 குப்பை தொட்டிகள் வைத்து குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

மீதமுள்ள கடைகளில் விரைந்து வைக்க கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைகளின் உரிமையாளர்கள் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மாநகராட்சி குப்பை தொட்டிகள் அல்லது குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களில் சேர்க்க வேண்டும்.

நடைபாதை, சாலைகளில் குப்பைகளை கொட்டும் கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மேலும், பொதுமக்கள் பொது இடங்களில் தேங்கியுள்ள குப்பைகள் குறித்த புகார்களை தெரிவிக்க மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், மாநகராட்சியின் சார்பில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், மற்றும் அம்பத்தூர் (சில பகுதிகள் மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகள் குறித்து 1913 என்ற புகார் எண்ணில் தெரிவிக்கலாம்.

உர்பேசர் மற்றும் சுமீத் நிறுவனத்தின் மூலம் தூய்மைப் பணிகள் மேற் கொள்ளப்படும் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள குப்பகைள் குறித்து 1913 மற்றும் 89255 22069 என்ற எண்களிலும் புகார் கூறலாம்.

என்விரோ நிறுவனத்தின் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் (சில பகுதிகள்) மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகள் குறித்து 1913 மற்றும் 1800-833-5656 என்ற எண்களிலும் புகார்களை தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்