130 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி உலக சாதனை படைத்த சென்னை சிறுமி
130 நாடுகளின் தேசிய கீதங்களை ஸ்ருதி மாறாமல் பாடி உலக சாதனை படைத்த சென்னை சிறுமிக்கு பாராட்டுகள் குவிகின்றன.;
சென்னை,
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சிறுமி சுபிக்ஷா (வயது 12). 8-வது வகுப்பு பள்ளி மாணவியான இவர் உலக நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கான பயிற்சிகளையும் பெற்றுள்ளார்.
இதன்படி அவர் அல்பேனியா, ஆப்கானிஸ்தான் என அகர வரிசைப்படி 192 நாடுகளின் தேசிய கீதங்களை மனப்பாடம் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில், சென்னை திருவொற்றியூரில் 195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் உலக சாதனை முயற்சிக்கான நிகழ்ச்சி நடந்தது.
இதில் சிறுமி சுபிக்ஷா கலந்து கொண்டார். அவர் ஏறக்குறைய நிகழ்ச்சியில் 6 மணிநேரம் வரை இடைவிடாது 130 நாடுகளின் தேசிய கீதங்களை, ஸ்ருதி மாறாமல் பாடி உலக சாதனை படைத்து உள்ளார். அவருக்கு ஆசிரியர் உள்ளிட்டோரின் பாராட்டுகள் குவிகின்றன.