எடப்பாடி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு...!

எடப்பாடி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்து தங்க சங்கிலி பறித்து தப்பிய மர்மநபருக்கு வலைவீச்சு

Update: 2023-06-17 20:03 GMT

எடப்பாடி 

எடப்பாடி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் தாக்கி, அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்கூட்டரில் சென்ற பெண்

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம் பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, நிலத்தரகர். இவருடைய மனைவி கோமதி (வயது 41). இவர் தனது சொந்த வேலையாக நேற்று முன்தினம் இரவு தனது ஸ்கூட்டரில் எடப்பாடிக்கு வந்தார். அங்கு வேலை முடிந்து அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

கொங்கணாபுரத்தை அடுத்த ரெட்டிபட்டி கிருஷ்ணன் கோவில் அருகே, எடப்பாடி-சேலம் பிரதான சாலையில் அவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் ஒருவர் வந்தார்.

அவர் ஸ்கூட்டரில் சென்ற அந்த பெண்ணை தாக்கினார். மேலும் அந்த பெண் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.

காயம்

இதனிடையே மர்ம நபர் நகையை பறித்து தாக்கியதில், நிலைகுலைந்து ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த கோமதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் கோமதியை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

எடப்பாடி அருகே இரவு நேரத்தில் நடைபெற்ற தங்க நகை பறிப்பு சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்