சென்னையில் கல்லூரி மாணவி தற்கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம் - 3 பேர் கைது

சென்னையில் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-05-12 02:55 GMT

சென்னை,

சென்னையில் இன்ஸ்டாகிராமில் விளம்பரத்தை நம்பி ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.30,000 இழந்த கல்லூரி மாணவி மகாலட்சுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்காளத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக அமானுல்லா கான், முகமது பைசல், முகமது ஆசிப் இக்பால் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கின் முழு விவரம்:-

சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி சாந்தி. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு 2 மகள்கள். இதில் மூத்த மகள் மகாலட்சுமி (வயது 19). இவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

மகாலட்சுமி, இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து, ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார். இதில் அவர், ரூ.30 ஆயிரம் வரை பணத்தை கட்டி இழந்துவிட்டார். இதையறிந்த சாந்தி, குடும்பம் கஷ்டத்தில் இருக்கும்போது இப்படி பணத்தை கட்டி இழந்து விட்டாயே? என மகளை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மகாலட்சுமி, கடந்த மாதம் 2-ந் தேதி வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்