வீட்டை உடைத்த காட்டு யானை
மழவன் சேரம்பாடியில் வீட்டை உடைத்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.;
பந்தலூர்
பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடி, கோட்டப்பாடி, தட்டாம்பாறை, எடத்தால் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மழவன் சேரம்பாடி பகுதிக்குள் காட்டு யானை புகுந்தது. தொடர்ந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டது. பின்னர் சிவராஜ் என்பவரது வீட்டு சமையலறை மேற்கூரையை உடைத்தது. உள்ளே இருந்த பாத்திரங்கள், பொருட்களை யானை சேதப்படுத்தியது. அப்போது சத்தம் கேட்டு பார்த்த சிவராஜ் குடும்பத்தினர் யானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வெளியே செல்ல முடியாமல் ஒரு அறையில் முடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையை விரட்டினர். இதேபோல் கோட்டப்பாடி பகுதியில் காட்டு யானைகள் சாலையில் உலா வந்ததுடன், வாகனங்களை வழிமறித்தன. தகவல் அறிந்த பிதிர்காடு வனக்காப்பாளர் கோபு உள்ளிட்டோர் யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.