தர்மபுரி மாவட்டத்தில் 3 இடங்களில்ஆதார் அட்டைகளை புதுப்பிக்க சிறப்பு முகாம்30-ந் தேதி நடக்கிறது
தர்மபுரி மாவட்டத்தில் 3 இடங்களில் ஆதார் அட்டைகளை புதுப்பித்து கொள்ள சிறப்பு முகாம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆதார் புதுப்பிப்பு
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலம் வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை மத்திய, மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள் பெறவும், வங்கி தொடர்பான சேவைகளை பெறவும் பயன்படுகிறது. இந்த நிலையில் மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது.
இதன்படி ஆதார் அட்டைதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் ஆதார் அட்டைகளை புதுப்பித்து கொள்ள வேண்டும். கடந்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் ஆதார் அட்டையில் உள்ள அடையாள சான்று, முகவரி சான்று ஆகியவற்றை புதுப்பித்து கொள்ள வேண்டும். இதற்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள நிரந்தர ஆதார் சேவை மையத்தை அணுகலாம்.
சிறப்பு முகாம்
இதேபோல் மை ஆதார் என்ற இணையதளத்திலும் புதுப்பித்து கொள்ளலாம். மேற்படி ஆதார் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் மூலம் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 3-வது கட்டமாக ஆதார் சிறப்பு முகாம் தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு ஒன்றியம் பேளாரஅள்ளி, காரிமங்கலம் ஒன்றியம் திண்டல், அரூர் ஒன்றியம் செல்லம்பட்டி ஆகிய 3 கிராமங்களில் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
இந்த சிறப்பு முகாமிற்கு வரும் பொதுமக்கள் ஆதார் அட்டைகளை புதுப்பிக்க தேவையான ஆவணங்களுடன் வர வேண்டும். புதுப்பித்தல் கட்டணமாக ரூ.50 செலுத்தி தங்கள் ஆதார் அட்டைகளை புதுப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.