தூக்கில் பிணமாக தொங்கிய ஏ.சி. மெக்கானிக்

தூக்கில் பிணமாக ஏ.சி. மெக்கானிக் தொங்கினார்.

Update: 2023-06-20 21:56 GMT

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம், புதுக்காலனி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது வீட்டின் முதல் தளத்தில் கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியை சேர்ந்த ராஜா (வயது 38) என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார். இவர் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். ராஜாவிற்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் வசித்து வந்த வீடு கடந்த 2 நாட்களாக உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசியது. இது பற்றி நேற்று அப்பகுதி மக்கள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ராஜா தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளான ராஜா மனமுடைந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது, தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்