ராசிபுரம் அருகேதடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி பட்டதாரி உள்பட 2 பேர் பலி

Update: 2023-07-31 19:00 GMT

ராசிபுரம், ஆக.1-

ராசிபுரம் அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பட்டதாரி உள்பட 2 பேர் பலியாகினர்.

தடுப்பு சுவரில் மோதியது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மேட்டுக்காடு அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 24). பட்டதாரி. இவரும், அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரான சுரேஷ் (22) என்பவரும் புதுச்சத்திரம் அருகே உள்ள கோழிப்பண்ணையில் தீவனம் அரைக்கும் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 பேரும் ராசிபுரம் அருகே முத்துக்காளிப்பட்டியில் உள்ள உறவினர்கள் ராமர், லட்சுமணன் வீடுகளில் நடந்த கறி விருந்துக்கு சென்றனர்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சுரேஷ் ஓட்டினார். பிரபாகரன் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது ராசிபுரம் ஆண்டகளூர் கேட் சாலையில் உள்ள முனியப்பன் கோவில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.

காதல் திருமணம்

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பிரபாகரனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் பிரபாகரன், சுரேஷ் ஆகியோரின் உடல்கள் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விபத்தில் பலியான சுரேசுக்கு கீர்த்தனா (21) என்ற மனைவியும், கவியாழினி என்ற 7 மாத பெண் குழந்தையும் உள்ளனர். கீர்த்தனாவை, சுரேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்