காரிமங்கலம் அருகே பரிதாபம்:பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி சக்கரத்தில் சிக்கி பலி

காரிமங்கலம் அருகே பள்ளிக்கூடம் சென்றபோது பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தாள்.

Update: 2023-10-20 19:00 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே பள்ளிக்கூடம் சென்றபோது பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தாள்.

பள்ளி மாணவி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பூனாத்தனஅள்ளியை சேர்ந்தவர் சக்திவேல். தொழிலாளி. இவரது மகள் பிரியதர்ஷினி (வயது14). இவர் பெரியாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று காலை மாணவி பள்ளிக்கு செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் ஏறினாள். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவி படிக்கட்டில் நின்று சென்றுள்ளார்.

பெரியாம்பட்டி சாலையில் பூனாத்தனஅள்ளி பஸ் அருகே சென்றபோது டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் நிலை தடுமாறி மாணவி பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். அப்போது அவர் மீது அதே பஸ்சின் பின் சக்கரம் ஏறியது, இதில் மாணவி படுகாயம் அடைந்தார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்