தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகளை விற்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தடை செய்யப்பட்ட பரிசுச் சீட்டு விற்பனையை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-06-28 18:07 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சேலத்தில் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டு விற்பனை நடைபெற்று வருவதை காட்சி ஊடகம் மூலம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகள் கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது!

சேலம், சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகளும், ஒரு நம்பர் பரிசுச்சீட்டுகளும் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியும் இந்த சமூகத் தீமையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது!

ஆன்லைன் சூதாட்டம் என்ற மிகப்பெரிய சமூகத் தீமைக்கு தமிழக அரசு முடிவு கட்டியிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் எத்தனைக் குடும்பங்கள் சீரழிகின்றனவோ, அதை விட அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகளால் சீரழிந்து கொண்டிருக்கின்றன!

தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டே பரிசுச்சீட்டுகள் தடை செய்யப்பட்டு விட்டன. அந்தத் தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டும். பரிசுச்சீட்டுகளை விற்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் ஏழைக் குடும்பங்கள் வீதிக்கு வருவதை தடுக்க வேண்டும்!"

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்