நாகைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க நடவடிக்கை

காரைக்கால் - பேரளம் ரெயில் பாதை பணிகள் முடிந்தவுடன் நாகைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-09 19:30 GMT

காரைக்கால் - பேரளம் ரெயில் பாதை பணிகள் முடிந்தவுடன் நாகைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

கருத்தரங்கம்

நாகூரில் உள்ள தனியார் பள்ளியில் இந்தியன் ரெயில்வே சார்பில் ரெயில் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு திருச்சி ரெயில்வே கோட்ட இயக்கவியல் மேலாளர் ஹரிகுமார் தலைமை தாங்கினார். இதில் ரெயில் உபயோகிப்பாளர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ரெயில் உபயோகிப்பாளர் நலச்சங்கத்தினர் திருச்சி ரெயில்வே கோட்ட இயக்கவியல் மேலாளர் ஹரிகுமாரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

தென் மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில், ஈரோடு - திருச்சி பயணிகள் ரெயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். வேளாங்கண்ணி- நாகை 'டெமு' ரெயிலை திருச்சி வரை இரவு நேரத்தில் இயக்க வேண்டும். பேரளம்- காரைக்கால் ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கூடுதல் ரெயில்கள்

இந்த மனுவை பெற்றுக் கொண்ட திருச்சி ரெயில்வே கோட்ட இயக்கவியல் மேலாளர், ஈரோடு - திருச்சி ரெயிலை காரைக்கால் வரை நீட்டிப்பது குறித்த கோரிக்கையை ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம்.

இது தற்போது பரிசீலனையில் உள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் அந்த ரெயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்படும். அதேபோல காரைக்கால் - பேரளம் ரெயில் பாதை பணிகள் முடிந்தவுடன் நாகைக்கு கூடுதல் ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்