தூத்துக்குடியில் 890 பேருக்கு காவலர் உடல் தகுதி தேர்வு
தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 890 விண்ணப்பதாரர்களுக்கு இன்று துவங்கிய உடல் தகுதி தேர்வு நாளையும் நடைபெற உள்ளது.;
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த 9.11.2025 அன்று நடந்தது. இதில் தேர்ச்சி பெற்று தகுதியான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 890 விண்ணப்பதாரர்களுக்கு உடல் தகுதி தேர்வு இன்று (27.1.2026) துவங்கி 29.1.2026 வரை நடைபெற உள்ளது.
மேற்சொன்ன உடல் தகுதி தேர்வு இன்று ஈரோடு சிறப்பு அதிரடிப்படை (Special Task Force) ஐ.ஜி. மயில்வாகனன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் ஆகியோர் மேற்பார்வையில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 450 விண்ணப்பதாரர்களுக்கு இன்றும் (27.1.2026), 440 விண்ணப்பதாரர்களுக்கு நாளையும் (28.1.2026) உடற் தகுதி தேர்வு (Physical Measurement Test) நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சிபெறும் விண்ணப்பதார்கள் அடுத்த நாட்களில் நடைபெறும் உடற் திறனாய்வு (Physical Efficiency Test) தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த உடற்தகுதி தேர்வில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணி அலுவலர்கள், காவலர்கள் ஆகியோர் உடற்தகுதி தேர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.