அ.தி.மு.க. பிரமுகர் கொலையில்5 பேர் கோர்ட்டில் சரண்

அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் 5 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்

Update: 2023-08-16 21:44 GMT


தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 38). அ.தி.மு.க. நகர இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளராகவும், வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த ஆண்டு இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பழமார்நேரி சாலையில் உள்ள கடை ஒன்றில் பிரபு உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் ஆயுதங்களால் பிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே கொலை சம்பவத்தில் தொடர்புடைய பாரதிராஜா (26), மணிகண்டன் (33), ரமேஷ் (43), மஸ்தான் என்ற நாகராஜ் (30), சின்னையன் (24) ஆகிய 5 பேரும் மதுரை மாவட்ட முதலாவது கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்