முல்லைப்பெரியாற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி

கம்பம் அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

Update: 2023-01-17 19:00 GMT

தேனி மாவட்டம் கம்பம் மணிநகரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் மாலை இவர், தனது நண்பர்களுடன் கம்பம் அருகே சுருளிப்பட்டி தொட்டன்மன்துறை முல்லைப்பெரியாற்றில் தடுப்பணை பகுதியில் குளிக்க சென்றார். ஆற்றில் குளித்து கொண்டிருந்த மணிவண்ணன் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். அங்கு இருந்து அவரால் நீந்தி வர முடியவில்லை. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனைக்கண்ட அவருடைய நண்பர்கள் உடனே காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

இதுகுறித்து கம்பம் போலீஸ்நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் அவர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் மணிவண்ணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமானதால் மீட்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் தேடுதல் பணி நடந்தது. அப்போது தடுப்பணை பகுதி அருகே மணிவண்ணனின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். நீரில் மூழ்கிய அவர் இறந்தது தெரியவந்தது. உடலை கைப்பற்றி போலீசார், பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்