களக்காடு நாராயணசாமி கோவிலில் ஆனித் தேரோட்ட திருவிழா கொடியேற்றம்

களக்காடு நாராயணசாமி கோவிலில் ஆனித் தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-06-24 04:22 GMT

களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஸ்ரீமந் நாராயணசுவாமி கோவிலில் 93-வது ஆண்டு ஆனித் தேரோட்டத் திருவிழாவின் 1-ம் திருநாளான இன்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் திருப்பள்ளி எழுப்புதல் நடந்தது. அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது.

அதன்பின் அய்யா நாராயணசுவாமி நாற்காலியில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு மேளதாளங்கள் முழங்க கோவில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் நாராயணசுவாமி தொட்டில் வாகனத்தில் எழுந்தருளினார்.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினசரி காலை மற்றும் இரவில் அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். விழாவின் 8-ம் நாளான வரும் 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பரிவேட்டை விழா நடக்கிறது.

அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஊருக்கு மேற்கே உள்ள ஆற்றில் பரிவேட்டையாடுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 11-ம் நாளான 4-ம் தேதி (திங்கள் கிழமை) நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல், கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்