ஊரக வளர்ச்சித்துறை பொறியியல் பிரிவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சிவகங்கையில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பொறியியல் பிரிவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கியது.

Update: 2022-10-14 18:45 GMT

சிவகங்கையில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பொறியியல் பிரிவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கியது.

பணம் சிக்கியது

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஊராட்சிகளின் பொறியியல் பிரிவு செயல்படுகிறது. இப்பிரிவில் நேற்று மாலையில் சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ, தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா முகமது, மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.45 ஆயிரத்தை கைப்பற்றினார்கள்.

இந்த அலுவலகத்தில் ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்தை கைப்பற்றினார்கள்.

2-வது முறையாக

இதுதொடர்பாக பொறியியல் பிரிவின் செயற்பொறியாளர் சிவராணி, உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் மற்றும் நீலமேகம், அருணகிரி, ராஜசேகரன், ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் மீண்டும் 2-வது முறையாக இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்துள்ளனர். தற்போது இந்த அலுவலகத்தின் செயற்பொறியாளர் சிவராணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் தூத்துக்குடிக்கு மாறுதல் செய்யபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்