போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் பங்கேற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-06-26 19:15 GMT

கடமலைக்குண்டு கிராமத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி போலீஸ் துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை இன்ஸ்பெக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தின்போது போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ-மாணவிகள் கோஷமிட்டபடி சென்றனர். ஊர்வலம் முடிவில் போலீஸ்நிலைய வளாகத்தில் விளையாட்டு, கட்டுரை போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமசாமி, வரதராஜன், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

இதேபோல் கம்பத்தில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தாமரைகண்ணன் முன்னிலை வகித்தார். இந்த ஊர்வலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் போதைப்ெபாருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைளை ஏந்தி சென்றனர். கூடலூரில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டி தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கொண்டு சென்றனர். நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், கணேசன், மூவேந்தன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முகுந்தன் மற்றும் தனியார் ராணுவ பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

போடியில் போலீஸ் துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி மாணவர்கள் மற்றும் ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கொண்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்