மூதாட்டி கொலை வழக்கில் மர்ம நபர்களை கைது செய்யக்கோரிவேலூர் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

மூதாட்டி கொலை வழக்கில் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி வேலூர் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-10-16 19:00 GMT

பரமத்திவேலூர்:

மூதாட்டி கொலை வழக்கில் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி வேலூர் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

மூதாட்டி கொலை

பரமத்திவேலூர் அருகே குப்புச்சிபாளையம் குச்சிகாடு தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 70). மோகனூர் சர்க்கரை ஆலையில் காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி நல்லம்மாள் (65). கணவன், மனைவி தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அதிகாலை சண்முகத்தின் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் தூங்கி கொண்டிருந்த நல்லம்மாளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தனர். சண்முகம் மீது மிளகாய் பொடியை தூவி விட்டு இரும்பு கம்பியால் தாக்கியதுடன், வெளி கதவை பூட்டி விட்டு சென்றனர். இதையடுத்து போலீசார் சண்முகத்தை மீட்டு கரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

முற்றுகை

இந்த நிலையில் கொலையாளிகளை உடனடியாக செய்யக்கோரி நேற்று காலை வேலூர் போலீஸ் நிலையத்தை மூதாட்டியின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். இதையடுத்து தனிப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு வின்சென்ட், இன்ஸ்பெக்டர் இந்திராணி ஆகியோர் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் கொலையளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்