இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்த முயன்ற 2 பேர் கைது

இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-21 16:40 GMT

பனைக்குளம், 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள காந்திநகர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ராமேசுவரம் நோக்கி வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் ஏராளமான சாக்கு பைகளில் சங்குகள் இருந்தது. மேலும் சங்குகள் இருந்த சாக்கு பைகளின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2 சாக்கு பைகளை பிரித்து பார்த்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 30 கிலோ கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது.

அந்த பையில் இருந்த பதப்படுத்தப்பட்ட 30 கிலோ கடல் அட்டை மற்றும் சரக்கு வாகனத்தையும் சங்குகளையும் பறிமுதல் செய்த வனத்துறையினர் வாகனத்தில் இருந்த 2 பேரையும் கைது செய்து மண்டபம் வனத்துறை அலுவலகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்ததாக தொண்டி வட்டானம் பகுதியை சேர்ந்த ஜோதி முருகன் (வயது34), தொண்டி கொடிபங்கு பகுதியை சேர்ந்த சேகர் (55) என்பதும் தெரியவந்தது. தொண்டி பகுதியில் இருந்து இந்த கடல் அட்டைகள் மற்றும் சங்குகள் வாகனத்தில் ஏற்றி ராமேசுவரத்தில் உள்ள வியாபாரி ஒருவருக்கு கொடுப்ப தற்காக ஏற்றி வந்ததாக தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து வனத்துறையினர் 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த பதப்படுத்தப்பட்ட 30 கிலோ கடல் அட்டையின் சர்வதேச மதிப்பு சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்றும் இலங்கைக்கு கடத்துவதற்காக வியாபாரிடம் கொடுக்க மறைத்து வைத்து எடுத்து வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்