பர்கூர் மலைப்பகுதியில் ரூபாய் நோட்டுகளை ரோட்டில் வீசிச்சென்ற வாலிபரால் பரபரப்பு; பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

பர்கூர் மலைப்பகுதியில் ரூபாய் நோட்டுகளை ரோட்டில் வீசிச்சென்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2022-07-29 21:09 GMT

அந்தியூர்

பர்கூர் மலைப்பகுதியில் ரூபாய் நோட்டுகளை ரோட்டில் வீசிச்சென்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ரூபாய் நோட்டுகள்

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் கிழக்கு மலை பகுதியான பெஜிலட்டி பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வெகுநேரமாக சுற்றித்திரிந்தார். மேலும் அவர் தனது கையில் கத்தை கத்தையாக 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததை பொதுமக்கள் பார்த்தனர்.

இதனால் சந்தேகமடைந்து அந்த நபரிடம் விசாரித்தனர். பொதுமக்களை கண்டதும் பயந்து அந்த வாலிபர் அந்த பணத்தை ரோட்டில் வீசிவிட்டு அங்கிருந்து ஓடினார். இதனால் பொதுமக்கள் அவரை துரத்திச்சென்று பிடித்தனர்.

போலீசார் விசாரணை

உடனே இதுபற்றி பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த வாலிபரிடம் விசாரித்தனர். ஆனால் அந்த நபருக்கு தனது பெயர், ஊர் பெயர் எதுவும் சொல்ல தெரியவில்லை. சில வார்த்தைகளை இந்தியில் சொன்னதால் வடமாநில வாலிபராக இருக்கலாம் என கூறப்படுகிறது. சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் தெரிந்தது.

அவர் வைத்திருந்த பணம் கோவிலிலோ அல்லது வீடுகளிலோ புகுந்து திருடியதாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

பரபரப்பு

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிடம் இருந்து பணத்தை கைப்பற்றினர். அவரை மருத்துவ பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Tags:    

மேலும் செய்திகள்