வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
நாமக்கல்லில் வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.;
வக்கீல்
நாமக்கல் அருகே உள்ள பீமநாயக்கனூரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 46). வக்கீல். இவர் குற்றவியல் வக்கீல் சங்கத்தில் 18 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் நேற்று நல்லிபாளையத்தை சேர்ந்த ரங்கநாயகி என்பவர் தனது கணவர் முத்துசாமி மீது கொடுத்த புகார் மனு விசாரணைக்காக, முத்துசாமி சார்பாக நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் வந்தார்.
அப்போது போலீஸ் நிலையம் நுழைவு வாயில் அருகில் வந்தபோது, ரங்கநாயகியும், பெயர் தெரியாத ஒருவரும் முத்துசாமியை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வக்கீல் அய்யப்பன், அவரிடம் நீங்கள் ஏன் ? என் கட்சிக்காரரிடம் பேசுகிறீர்கள் என்று கேட்டு உள்ளார். அதற்கு அந்த நபர், வக்கீல் அய்யப்பனை தகாத வார்த்தையால் திட்டி, நானும் வக்கீல்தான் என்று கூறி உள்ளார். இதையடுத்து வக்கீல் அய்யப்பன் அவரிடம் அடையாள அட்டை கேட்டு உள்ளார்.
கைது
அடையாள அட்டையை காண்பிக்காத அவர், வக்கீல் அய்யப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வக்கீல் அய்யப்பன் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மனுவில், போலியாக வக்கீல் என்று சொல்லி, தகாத வார்த்தையால் திட்டி, கொலைமிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், காரைக்குடி புதுவயல் பகுதியை சேர்ந்த அலெக்ஸாண்டர் (45) என்பதும், உளவியல் நிபுணராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.