புதுச்சத்திரம் அருகே கந்துவட்டி புகாரில் மூதாட்டி கைது ஆவணங்கள் பறிமுதல்

புதுச்சத்திரம் அருகே கந்துவட்டி புகாரில் மூதாட்டி கைது ஆவணங்கள் பறிமுதல்

Update: 2022-06-23 18:31 GMT


நாமக்கல் அருகே உள்ள பெரியமணலியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 32). இவர் தற்போது ராசிபுரம் அடுத்த கூனவேலம்பட்டிபுதூரில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த வெங்கடாஜலம் (39) என்பவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு வீட்டை அடமானமாக வைத்து ரூ.50 ஆயிரம் கடனாக வாங்கி உள்ளார். அதற்காக வேலகவுண்டம்பட்டியில் பத்திரப்பதிவும் செய்து கொடுத்துள்ளார். இதற்காக 1¾ வட்டி செலுத்துவதாக கூறப்படுகிறது.

பின்னர் அவ்வப்போது வெங்கடாஜலத்திடம், தங்கராஜ் ஆவணம் ஏதுமின்றி பணம் வாங்கியதாக தெரிகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் வெங்கடாஜலமும், அவரது தாய் சகுந்தலாமணி (70) ஆகியோர் தனது வீட்டிற்கு வந்து ரூ.20 லட்சம் தர வேண்டும் அல்லது வீட்டை எழுதி தர வேண்டும் என மிரட்டியதாக தங்கராஜ் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.

ரூ.50 ஆயிரம் கடன் பெற்றதற்காக, இதுவரை ரூ.7 லட்சம் வரை வட்டி செலுத்திவிட்டதாகவும் தற்போது வெங்கடாஜலம் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகவும் தங்கராஜ் புகாரில் கூறியிருந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சகுந்தலாமணியை கைது செய்ததோடு பத்திரங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் சகுந்தலாமணி சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் வெங்கடாஜலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்