விருது வாங்கி தருவதாக கூறி வக்கீலிடம் ரூ.14¾ லட்சம் மோசடி செய்தவர் கைது
மத்திய அரசின் விருது வாங்கி தருவதாக கூறி வக்கீலிடம் ரூ.14¾ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;
மத்திய அரசின் விருது வாங்கி தருவதாக கூறி வக்கீலிடம் ரூ.14¾ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வக்கீல்
மதுரை தாசில்தார்நகர் அருகே ராஜவீதியை சேர்ந்தவர் சலீம் ராஜா (வயது 61). வக்கீல். இவர் கோவை குனியமுத்தூர் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எனக்கு கடந்த 2021-ம் ஆண்டு இணையதளம் மூலமாக கோவைப்புதூரை சேர்ந்த இக்னசியஸ் பிரபு (40) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் என்னிடம் மத்திய அரசில் தனக்கு தெரிந்தவர்கள் உள்ளதாக கூறினார்.
மேலும் டாக்டர்கள், தொழில் அதிபர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு ஜன் சேவா புரஸ்கர விருது வாங்கித் தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் என்றும் கூறினார்.
ரூ.14¾ லட்சம் மோசடி
அதை உண்மை என்று நம்பிய நான் கடந்த ஆண்டு டாக்டர்கள், தொழில் அதிபர்கள் உள்பட 12 பேரிடம் ரூ.14 லட்சத்து 85 ஆயிரம் வாங்கி இக்னசியஸ் பிரபுவிடம் கொடுத்தேன். ஆனால் பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் அவர் கூறியபடி விருது வாங்கி கொடுக்கவில்லை.
இதற்கிடையே என்னிடம் பணம் கொடுத்தவர்கள் மீண்டும் பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வருகிறார்கள். எனவே என்னிடம் பணத்தை வாங்கி மோசடி செய்த இக்னசியஸ் பிரபு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
கைது
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து மத்திய அரசின் விருது வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்து 85 ஆயிரம் மோசடி செய்த இக்னசியஸ் பிரபுவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.