கூடுதல் பஸ் வசதி கேட்டு அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் மீண்டும் போராட்டம்- கிணத்துக்கடவு அருகே பரபரப்பு

கிணத்துக்கடவு அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-07-14 19:57 IST

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெரிசலால் மாணவர்கள் அவதி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சேரிபாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு தாமரைக்குளம், நல்லட்டிபாளையம், பட்டணம், எம்மேகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பல கிராமப் பகுதியில் இருந்து மாணவர்கள் அரசு பஸ்சில் சென்று படித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்ல கிணத்துக்கடவிலிருந்து ஒரு அரசு பஸ் மற்றும் தனியார் பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த தனியார் பஸ் கொரோனா தொற்று அதிகமான நேரத்தில் நிறுத்தப்பட்டதால் சேரிபாளையம் பள்ளிக்கு செல்லும் நேரத்திற்கு தற்போது ஒரே ஒரு அரசு பஸ் மட்டும் கிணத்துக்கடவிலிருந்து இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் சேரி பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தினசரி காலையில் 150- க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர். மேலும் இந்தப் பகுதியில் உள்ள தென்னை நார் மற்றும் தேங்காய் உரிக்கும் தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்களும் இதே பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர். காலையில் 8.15 மணிக்கு கிணத்துக்கடவிலிருந்து சேரிபாளையத்திற்கு நல்லட்டி பாளையம் வழியாக ஒரே ஒரு பஸ் மட்டும் செல்வதால் இந்த அரசு பஸ் எப்போதும் கடும் கூட்ட நெரிசலாக காணப்படும்.

மீண்டும் பஸ்கள் சிறைபிடிப்பு

இந்தநிலையில் மாணவர்கள் பொதுமக்கள் ஆத்திரமடைந்து கடந்த 1-ந்தேதி பட்டணம் பகுதியில் அரசு பஸ்சை சிறைபிடித்து கூடுதல் பஸ் செய்து தரவேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், மாணவர்களிடம் போலீசார், போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும், இதுவரை அந்த கிராமங்களுக்கு கூடுதல் பஸ் விட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மீண்டும் 2-வது முறையாக கிணத்துக்கடவில் இருந்து தாமரைக்குளம் வழியாக சேரிபாளையம் சென்ற அரசு டவுன் பஸ்சை தாமரைக் குளத்திலும்,  நல்லட்டிபாளையத்திலும் அடுத்தடுத்து அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பெரும் பரபரப்பு நிலவியது.

விரைவில் நடவடிக்கை

இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் போக்குவரத்து துறை அதிகாரிகள் வந்தால் தான் போராட்டத்தை கை விடுவோம் என்று கூறினர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொள்ளாச்சி போக்குவரத்து துறை அதிகாரிகள்வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் உயர் அதிகாரிகளிடம் பேசி கூடுதல் பஸ் வசதி கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்களும் பொதுமக்களும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்