அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கிடப்பில் போடப்படவில்லை - அமைச்சர் துரைமுருகன்
அத்திக்கடவு- அவிநாசி திட்டம் கிடப்பில் போடப்படவில்லை என காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.;
காட்பாடி,
காட்பாடி தொகுதியில் பள்ளிகுப்பம், பெரிய புதூரில் ரேஷன் கடைகளும், நடுமோட்டூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பஸ் நிழற்கூடம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு ரேஷன் கடைகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், பஸ் நிழற்கூடம் ஆகியவற்றை திறந்து வைத்து பேசினார். பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
அத்திகடவு -அவினாசி திட்டம் கிடப்பில் போடப்படவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் தான் அப்படியே விட்டுவிட்டனர். நாங்கள் தான் எல்லோருக்கும் தண்ணீர் கொடுத்துள்ளோம். காவிரி- குண்டாறு திட்டம் தி.மு.க செயல்படுத்தவில்லை என கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவருக்கு என்ன திட்டம் என்றே தெரியாது. காவிரி- குண்டாறு திட்டம் என்பது ஆறுகளை இணைப்பது. இன்னும் இணைக்கும் அளவுக்கு தண்ணீரில்லை. ஆனால் இணைக்கும் திட்டத்தை 4 பகுதிகளாக பிரித்து மாயனூரில் இருந்து குண்டாறு வரையில் கால்வாய்களை வெட்டியுள்ளோம்.
முக்கொம்பு அணை அ.தி.மு.க ஆட்சியில் தான் பழுதானது. அதை நாங்கள் சரி செய்கிறோம். முல்லை பெரியாறு அணையில் அதிக அளவு தண்ணீர் வருகிறது . மக்கள் அச்சப்படுகின்றனர். அதனால் தண்ணீரை கேரளாவுக்கு விடுகிறோம் அவர்கள் கேட்டதால் தண்ணீரை விடுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.