பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி, பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2023-06-25 20:32 GMT

விக்கிரமசிங்கபுரம்:

வார விடுமுறையையொட்டி, பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

அகஸ்தியர் அருவி

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதாலும், ஆன்மிக அருவியாக திகழ்வதாலும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்கின்றனர்.

வார விடுமுறை தினமான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் குடும்பத்தினருடன் அகஸ்தியர் அருவியில் குவிந்து உற்சாகமாக குளித்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அருவியில் ஆனந்தமாக நீராடினர்.

மதுபானங்கள் அழிப்பு

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்த நிலையில், அங்கு சென்றவர்களும் அகஸ்தியர் அருவியில் நீராட குவிந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாபநாசம் வன சோதனைச்சாவடியில் சுற்றுலா பயணிகளின் உடைமைகளை பரிசோதித்த பின்னரே அனுமதித்தனர். அங்கு சுற்றுலா பயணிகள் கொண்டு வந்த சுமார் 10 லிட்டர் மதுபானங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்