முதியவர் மீது சரமாரி தாக்குதல்

பழனியில் முதியவர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-25 20:00 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவர் பழனி அடிவாரம் பகுதியில் தங்கியிருந்து யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், அடிவாரம் சன்னதி வீதி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அடிவாரம் பகுதியை சேர்ந்த முகேஷ்குமார் (30) அங்கு வந்தார். பின்னர் திடீரென முகேஷ்குமார், ராஜேந்திரனிடம் தகராறு செய்து, அவரை கம்பால் தாக்கினார்.

இதற்கிடையே வலியால் அலறிய ராஜேந்திரன் ஒரு டீக்கடைக்குள் தஞ்சம் புகுந்தார். ஆனாலும் முகேஷ்குமார், விரட்டி சென்று ராஜேந்திரனை கம்பால் தாக்கினார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து முகேஷ்குமாரை விலக்கி விட்டனர். இந்நிலையில் ராஜேந்திரன் தாக்கப்பட்ட வீடியோ காட்சி டீக்கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

தற்போது இந்த வீடியோ முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தநிலையில் முதியவரை தாக்கிய முகேஷ்குமாரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து பழனி அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகேஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்