சாலையில் ஒய்யார நடை போட்ட காட்டெருமை

கோத்தகிரியில், சாலையில் காட்டெருமை ஒய்யார நடை போட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

Update: 2023-10-25 20:15 GMT

கோத்தகிரியில், சாலையில் காட்டெருமை ஒய்யார நடை போட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

வனவிலங்குகள்

கோத்தகிரி நகரின் பல பகுதிகளில் காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி, கரடி, புலி, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று மாலை 4 மணிக்கு பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிக்க ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து காமராஜர் சதுக்கத்திற்கு செல்லும் பிரதான சாலையில் காட்டெருமை ஒன்று சாவகசமாக நடந்து சென்றது. இதை கண்ட பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர். மேலும் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பரபரப்பு

இதற்கிடையில் ஒரு சில இருசக்கர வாகன ஓட்டிகள் காட்டெருமையை பொருட்படுத்தாமல் முன்னோக்கி சென்றனர். இதனால் காட்டெருமை பீதியடைந்து எங்கும் செல்ல முடியாமல் திணறியது. பின்னர் டான்போஸ்கோ செல்லும் சாலை வழியாக சென்று, அங்குள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.

பள்ளிகள் விடும் நேரத்தில் பிரதான சாலை வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு காட்டெருமை நடந்து சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நடவடிக்கை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், முக்கிய சாலைகளில் இரவு நேரத்தில் மட்டுமின்றி, பகல் நேரத்திலும் காட்டெருமைகள் சாலைகளில் நடமாடி வருகின்றன. இவற்றால் பொதுமக்களுக்கோ அல்லது வாகன ஓட்டிகளுக்கோ அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கோத்தகிரி நகர் பகுதியில் சுற்றித்திரியும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்