அடுத்தடுத்து இருவரிடம் நூதன முறையில் செல்போன் பறிப்பு

பூந்தமல்லி அருகே இருவரிடம் அடுத்தடுத்து நூதன முறையில் செல்போன் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-02-23 09:08 GMT

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35), இவர் நேற்று நசரத்பேட்டை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மொபெட்டில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் தனது பெற்றோருக்கு போன் செய்ய வேண்டும் என்று கூறியதையடுத்து கண்ணன் செல்போனை கொடுத்தார். பெற்றோரிடம் செல்போனில் பேசுவது போல் நடித்து திடீரென மொபெட்டில் இருவரும் தப்பி சென்றனர். அவர்களை விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. இதேபோல் சல்மான் என்பவர் நசரத்பேட்டை அருகே நடந்து சென்றபோது தங்களது கடையிலிருந்த செல்போனை எடுத்து வந்து விட்டதாகவும் அதனை பரிசோதனை செய்ய வேண்டும் என மொபெட்டில் வந்த 2 பேர் சல்மானிடம் கூறினர். இதையடுத்து சல்மானும் தனது செல்போனை காண்பித்த நிலையில் அவரிடம் இருந்து செல்போனை வாங்கி பார்ப்பது போல் திடீரென செல்போனை பிடுங்கி கொண்டு இருவரும் வேகமாக தப்பி சென்று விட்டனர். இந்த இரு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருவரிடம் அடுத்தடுத்து நூதன முறையில் செல்போன் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்