திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு

திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதனால், மேட்டூர் அணை தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்லும்.

Update: 2023-06-10 00:03 GMT

சென்னை,

காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய நேற்று முன்தினம் இரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.

நேற்று காலை தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில், இவ்வாண்டு காவிரி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார்.

ரூ.90 கோடியில் தூர்வாரும் பணி

2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டில், நீர்வளத்துறையின் மூலம் கால்வாய்கள் சீரமைப்பு, ஏரிகள் புனரமைப்பு, அணைக்கட்டுகள் புதுப்பித்தல், மழைநீர் சேகரிப்பு போன்ற எண்ணற்ற திட்டங்கள் விவசாயிகளையும் உள்ளடக்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வரும் ஆண்டில் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களில் தூர்வாரும் பணிகள் ரூ.90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

எந்த இடத்தில் எவ்வளவு மதிப்பில் பணி?

அதன்படி, 2023-2024-ம் ஆண்டு திருச்சி மண்டலத்தை சார்ந்த சேலம் மாவட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 31 தூர்வாரும் பணிகளும், நாமக்கல் மாவட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 5 பணிகளும், திருச்சி மாவட்டத்தில் ரூ.15.88 கோடி மதிப்பீட்டில் 100 பணிகளும், கரூர் மாவட்டத்தில் ரூ.6.48 கோடி மதிப்பீட்டில் 38 பணிகளும், அரியலூர் மாவட்டத்தில் ரூ.3.13 கோடி மதிப்பீட்டில் 13 பணிகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் 39 பணிகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.20.45 கோடி மதிப்பீட்டில் 189 பணிகளும், திருவாரூர் மாவட்டத்தில் ரூ.12.83 கோடி மதிப்பீட்டில் 111 பணிகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.3.98 கோடி மதிப்பீட்டில் 28 பணிகளும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.8.06 கோடி மதிப்பீட்டில் 51 பணிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.2.69 கோடி மதிப்பீட்டில் 31 பணிகளும் மற்றும் கடலூர் மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 55 பணிகளும் என மொத்தம் ரூ.90 கோடி மதிப்பீட்டில் 4,773.13 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 691 பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது.

ஆண்டுதோறும் ஆய்வு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு பார்வையோடு, நிகர சாகுபடி பரப்பினை உயர்த்தவும், நீர் ஆதாரங்களை சிறந்த முறையில் மேம்படுத்தவும், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் போன்றவற்றை புனரமைத்து பாதுகாக்கும் பணிகளை ஆண்டுதோறும் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

அமைச்சர்கள், வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் நடத்தும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் கோரும் இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வார ஆணையிட்டு, அப்பணிகள் நடைபெறும் இடங்களில் நேரில் ஆய்வு செய்தார்.

கூடுதல் நிலங்களுக்கு பாசன வசதி

தஞ்சாவூர் மாவட்டம், ஆலக்குடியில் உள்ள முதலை முத்துவாரி மற்றும் விண்ணமங்கலத்தில் உள்ள 'சி' பிரிவு வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

அதாவது, தஞ்சாவூர் மாவட்டம், ஆலக்குடி கிராமத்தில் உள்ள முதலைமுத்துவாரி வடிகால் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 3.50 கி.மீ. தூரம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இத்தூர்வாரும் பணி மேற்கொள்வதால் சென்னம்பட்டி, குருவாடிப்பட்டி மற்றும் நாட்டாணி கிராமங்களில் மழையினால் ஏற்படும் வெள்ள சேதங்கள் தடுக்கப்படுவதோடு, வண்ணாரப்பேட்டை கிராமத்தில் உள்ள சுமார் 2,042 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

முதல்-அமைச்சர் ஆய்வு

மேலும், தஞ்சாவூர் மாவட்டம் விண்ணமங்கலத்தில் உள்ள 'இ' பிரிவு வாய்க்காலின் வேளாண்பொறியியல் துறை மூலம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 2.50 கி.மீ. தூரம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதால் பூதராயநல்லூர், விண்ணமங்கலம், தீச்சசமுத்திரம் மற்றும் வெங்கடசமுத்திரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 450 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திருமங்கலம் கிராமத்தில் உள்ள கூழையாறு வடிகால் மற்றும் ஆலத்தூர் மற்றும் லால்குடி வட்டத்தில் உள்ள இருதயபுரம் மற்றும் வெள்ளனூரில் நந்தியாறு வடிகாலில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

வெள்ள பாதிப்பு இருக்காது

அதாவது, திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள கூழையாற்றில் ரூ.1 கோடியே 94 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் 7.79 கி.மீ. தூரம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இவ்வடிகால் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதால் மேட்டுப்பட்டி, திண்ணியம், செங்கரையூர் மற்றும் டி.கல்விக்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நிலங்கள் வெள்ளப் பாதிப்பில் இருந்து தடுக்கப்படும்.

தொடர்ந்து, திருச்சி மாவட்டம் ஆலத்தூர் மற்றும் லால்குடி வட்டங்களில் அமைந்துள்ள இருதயபுரம் மற்றும் வெள்ளனூர் கிராமங்களில் நந்தியாற்றின் நீரோட்ட பாதையில் உள்ள முட்செடிகளை முழுவதுமாக அகற்றி அதனை 5.90 கி.மீ. நீளம் தூர்வாரி இரு பக்கக் கரைகளையும் பலப்படுத்திட ரூ.1 கோடியே 94 லட்சத்து 25 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதன் மூலம், ஊட்டத்தூர், நம்புக்குறிச்சி, பெருவளப்பூர், காணக்கிளியநல்லூர், வந்தலை கூடலூர், சங்கேந்தி மற்றும் வெள்ளனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 5,777 ஏக்கர் பாசனப் பரப்புகள் வெள்ள பாதிப்பில் இருந்து தடுக்கப்படும்.

கோரிக்கைகள் கேட்டறிந்தார்

இந்த தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வாய்க்கால்களில் உரிய நேரத்தில் கடைமடை வரை தங்குதடையின்றி சென்றடையவும் மற்றும் வெள்ளக்காலங்களில் விரைவில் தண்ணீர் வடியவும் ஏதுவாக இருக்கும்.

மேலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டம், லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆலங்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரிபவர்களிடம் கலந்துரையாடி அவர்களுடைய கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

உற்சாக வரவேற்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த இடங்களில் விவசாயப் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், கோரிக்கை மனுக்களை அளித்து தங்களது தேவைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி.க்கள் பழனிமாணிக்கம், ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், எ.சவுந்திரபாண்டியன், என்.தியாகராஜன், எஸ்.ஸ்டாலின் குமார், ஜவாஹிருல்லா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சச்சேனா, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்