கொதிக்கும் வெந்நீரில் விழுந்த குழந்தை பலி

ஸ்ரீமுஷ்ணம் அருகே கொதிக்கும் வெந்நீரில் விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2023-06-17 18:45 GMT

ஸ்ரீமுஷ்ணம், 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீஆதிவராகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சாபுலி, விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் கனிமொழி (வயது26). இவர் தஞ்சாவூர் மாவட்டம் ராஜமன்னார்குடி அருகில் உள்ள சேராக்குளத்தை சேர்ந்த பிரசாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரித்திஷா( 3) என்கிற மகளும், கவின் (1½) ஏன்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கனிமொழி கணவரை பிரிந்து தனது தந்தை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று குழந்தை கவினை குளிப்பாட்டுவதற்காக வீட்டு தோட்டத்தின் படிக்கட்டு அருகில் இருந்த விரகு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கனிமொழி வெந்நீர் போட்டார்.

அப்போது தோட்டத்து படிக்கட்டில் இறங்கிய கவின் எதிர்பாராதவிதமாக தவறி கொதித்து கொண்டிருந்த வெந்நீர் பாத்திரத்தில் விழுந்தான்.

பலி

இதில் கவினின் உடலில் வெந்நீர் கொட்டியதில் அவன் வலி தாங்க முடியாமல் கதறி அழுதான். சத்தம் கேட்டு வந்த உறவினர்கள், குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை கவின் பரிதாபமாக இறந்தான். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெந்நீர் கொட்டி 1½ வயது குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்